Wednesday, September 30, 2015

அபினிப் போர்கள் - IBIS Trilogy. நூல் விமர்சனம்

இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் சிறந்த கதைசொல்லியும், கனத்த அறிவியல்/வரலாற்றுத் தரவுகளுடன் புனைவுகளை யாப்பவருமான  அமிதாவ கோஷ் அவர்களின் ஆகச்சிறந்த படைப்பாகும்  IBIS Trilogy என்னும் மூன்று நூல்களைக்கொண்டதொகுப்பு.








சீனத்திற்கும் பிரிட்டிஷாருக்குமிடையே நடந்த அபினிப்போர்களை பின்புலமாக கொண்டது இந்தத் தொகுப்பு.

19ம் நூற்றண்டின் முற்பகுதியில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது, அதனால் புதிய காலனிகளில் வேலை செய்ய இந்தியாவிலிருந்து  கூலிகளை தருவித்தனர், முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை ஏற்றிச்சென்ற கப்பல்களையே, கூலிகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தினர். அப்படி ஒரு கப்பல் தான் IBIS.

போஜ்புரி மொழி பேசும் பூர்வாஞ்சல் பகுதியில் கிழக்கிந்த்திய கம்பனி குடியானவர்களைக்கொண்டு அபினி விளைவித்து சீனத்திற்கு ஏற்றுமதி செய்தது. 

அங்கு ஒருநாள் கணவன் மறைந்ததால் உடன்கட்டை ஏற்றப்பட்ட அதிதி என்ற பெண்ணை சிதையிலிருந்து மீட்கிறான் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த்த கலுவா , பெண்ணின் குடும்பம் துரத்த இருவரும் தப்பி ஓடுகிறார்கள். அப்போது மொரிசியஸ் சென்று கூலி வேலை செய்ய ஆள்எடுக்கும் சேதி கேட்டு, நாட்டை விட்டு தப்பியோட இதுவே சரியான வழி  என்று இருவரும் மொரிசியஸ் செல்ல உடன் படுகிறார்கள்.ஏஜண்டுகளால்  இருவரும் மற்றும் சில கூலிகளும்  படகில் ஏற்றி கல்கத்தாவிற்கு அனுப்பபடுகிறார்கள் 

இதனிடையே நீல் ரத்தன் ஹல்தார் என்னும் பன்மொழிப்புலமை கொண்ட  ஒரு ஜமீந்தாரை சூழ்ச்சி செய்து கடனாளியாக்கி போர்ஜரி வழக்கில் சிக்க வைக்கிறார் கிழக்கிந்திய கம்பனியின் வணிகர் ஒருவர். ஆங்கிலேய நீதிமன்றம் நீல் ரத்தன்  ஹல்தாரை மொரிசியஸிற்கு நாடு கடத்த உத்தரவிடுகிறது.

ஆஹ் ஃ பத், பார்சி அபினி வணிகருக்கும் சீனப்பெண்ணிற்கும் முறைதவறி பிறந்தவன், இவன் போதைக்கு அடிமையாகி தந்தையை தேடி இந்தியா வந்து ஏதோ வழக்கில் சிக்குகிறான்  இவனையும் மொரிசியஸிற்கு நாடு கடத்த உத்தரவிடுகிறது கம்பனி அரசு.

கூலிகளுடன் ஆஹ் ஃ பத், நீல் ரத்தன் ஆகியோரும் IBIS கப்பலில் ஏற்றி அனுப்பபடுகிறார்கள்.

நிகோபார் அருகே கப்பலில் சிப்பாயாக இருந்த அதிதியின் உறவினர் ஒருவர் அவளை அடையாளம் கண்டு  அதனால் ஒரு சிறு கிளர்ச்சி நடந்து  கப்பலிலிருந்து ஆஹ் ஃ பத், நீல் ரத்தன், கலுவா மற்றும் இரு மாலுமிகள்  அகியோர் தப்பிகின்றனர். அப்போது புயல் அடித்ததால் இவர்கள் இறந்ததாக மற்றவர்கள் கருதினர். 

ஆஹ் ஃ பத்  நீல் ரத்தனுடன்   சிங்கப்பூர் அடைந்து அங்கே தன் பார்சி  தந்தையிடம் குமாஸ்தாவாக நீல் ரத்தனை சேர்த்துவிடுகிறான். நீல் ரத்தன் தன முதலாளியுடன் அவரின் கப்பல் நிறைய அபினுடன் சீனம் செல்கிறார். 

சீனத்தில் போதை பழக்கம் பல சமூக பொருளாதார  பிரச்னைகளை கொடுத்ததால் அபினி வணிகத்தை ஒழிக்கபேரரசரின் ஆணைக்கிணங்க குவங்டாங் ஆளுனர் லின் ஜெக்ஸு கறார் நடவடிக்கை எடுத்துஅபினி சரக்குகளை அழிக்கிறார். இதனால் மனமுடைந்த பார்சி முதலாளி தற்கொலை செய்து கொள்கிறார். முதலாளி இறந்தபின் நீல் ரத்தன் சீனர்கள் பக்கம் சாய்ந்து அவர்களுக்காக மொழி பெயர்ப்பு வேலைகளை செய்கிறார்.

சீன அரசு நடவடிக்கையால் வெகுண்ட ஆங்கில வணிகர்கள் பிரிட்டிஷ் அரசை நிர்பந்தித்து  இந்திய சிப்பாய்கள்  மற்றும் போர்கப்பல்கள் கொண்ட படையை திரட்டி சீனத்தை போரில் வென்று  ஹாங்காங் நகரை எழுதி வாங்குகின்றனர். சீனர்கள் அபின் வர்த்த கெடுபிடிகளையும் தளர்த்தினர்.

ஆசிரியர் இந்த வரலாற்று நிகழ்வுகளை நீல் ரத்தன் , அதிதி, பார்சி வியாபாரி பஹ்ரம் , IBIS கப்பலின் மாலுமி ஜக்காரி ரீட் (இவன் ஒரு அமெரிக்கன் பின்னாளில் அதே கப்பலின் காப்டனாவும் தேர்த்த அபின் வியாபாரியாகவும் ஆகிறான்), கிழக்கிந்திய கம்பனின் சிப்பாய் கேசரி சிங் மற்றும் அவரின் அதிகாரி காப்டன் மீ ஆகியோரின் வாயிலாக அழகாக நடத்தி செல்கிறார்.

கிழக்கிந்திய கம்பனி வலுக்கட்டாயமாக விவசாயிகளை அபின் பயிரிட செய்தது , அவ்வாறு விளையும் பயிரை தங்களுக்கே அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டும் என்று கட்டாயபடுத்தியது , விலை கட்டுப்படி ஆகாததால் விவசாயிகள் கடனாளியானது, கடன்பட்ட சில குடும்பங்களிலிருந்து  சம்பளத்திற்கு சிப்பாய்களையும் மற்ற சில வீடுகளுக்கு அட்வான்ஸ் கொடுத்து வெளிநாட்டு கூலி வேலைக்கு ஒப்பந்தம்  போட்டது போன்ற தகவல்களை தருகிறார் ஆசிரியர்.

மேலும் ஷோக்காளி கல்கத்தா ஜமீந்தார்களின் வாழ்க்கை, அவர்களை நைஸாக வளைத்து கடன் வலையில் விழச்செய்யும் கம்பனி சூழ்ச்சி , 
மும்பை பகுதியில் கப்பல் கட்டுமானத்தில் ஈடுபட்ட பார்சி குடும்பங்களை அந்த தொழில் செய்ய விடாமல் தடுத்து (அப்போது தான் ஆங்கில கப்பல் கம்பனிகளுக்கு பாதிப்பு வராது) அவர்களை போதை பொருட்களை கப்பலில் ஏற்றி செல்ல வைத்த வரலாற்று தகவல்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

வெறும் மூவாயிரம் வீரர்களும், சில போர்கப்பல்களையும் மட்டுமே கொண்டு குவங்டாங் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர் ஆங்கிலேயர். அப்போதய  சீனப்போர்கப்பல்கள் மிகவும்  சிறியவை அய்ரோப்பிய கப்பல்களின் பலத்தின் முன்னால் நிற்க முடியாமல் திணறின , கடற் போரில் வெல்ல முடியாது என்று சீனர்கள் உணர்ந்து நிலத்துக்குள்ளே ஆங்கிலப்படைகளை வர வைத்தனர், ஆனால் சீனர்கள் அமைத்த அரண்கள் பிரிட்டிஷ் பீரங்கிகளுக்கு முன்னால் தவிடு பொடியாயின, சீனர்களின் துவக்குகளும் காலாவதியானவை , மேலும் முறையான பயிற்சியில்லாமல் அவசர கதியில் உள்ளுர் மக்களைக்கொண்டு அமைக்கப்பட்ட படைகளும் சிதறி ஓடின.

இந்த நிதரிசனத்தை மேலிடத்திற்கு தெரிவிக்காமல் போரில் நாம் வென்றோம் என்றே தலைநகருக்கு தகவல் சொல்லினர் சீன மாண்டரின்கள். இவர்கள் தந்த செய்தியை நம்பி மேலும் படைகளை அனுப்பாமல் விட்டது மேலிடம். விளைவு நிலைமை கையை மீறிச்சென்று இறுதியாக சரணடைகிறது சீனம்.

ஆசிரியரிடம் ஓரு academic rigour தெரிகிறது , முன்பு இவரின் Hungry Tide படைப்பிலும் இதனை காணலாம், புனைவு என்றலும் தேதிவாரியாக பல உண்மை நிகழ்வுகளுடன் சம்பவங்கள் ஒத்துப்போகின்றன, அராய்ச்சி கட்டுரையைப்போல நூலின் இறுதியில் பல பக்கங்களுக்கு ஆதாரக்குறிப்புகளைதந்திருக்கிறார். இந்தியாவில் அராய்ச்சி செய்த ஒரு பிரஞ்சு தாவரவியல் ஆய்வாளர் மற்றும் அவர் மகளின் கிளைக்கதையும் உண்டு இதிலும் இந்திய சீன தாவரங்களை ப்பற்றிய அறிய குறிப்புகளை தந்துள்ளார்.


ஆசிரியருக்கு புயல் என்றால் அலாதிப்பிரியம் என்று நினைக்கிறேன்.  முதல் பாகத்தின் இறுதியிலும் மூன்றம் பாகத்தில் இறுதியிலும் புயல் அடிக்கிறது உதனால் சம்பவங்களின் போக்குமாறுகிறது, இதே போன்று அவரின் முந்தைய Hungry Tide நாவலின் இறுதியிலும் புயல் முக்கிய பங்கு பெறுகிறது.


இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களில் பல நிகழ்வுகள் இரு பாத்திரங்களுக்கிடையே கடிதமாக விவரிக்கப்பட்டிருக்கிறது, விரிவஞ்சி இதனை செய்திருந்ததாலும் சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

Friday, January 16, 2015

துணிக்கடை பைகளில் காய்கறி வளர்ப்பு

துணிக்கடைகளில் நமக்கு கிடைக்கும் கட்டைப்பைகள், பெரிய நைலான் பைகள் போன்றவற்றை என்ன செய்வது என்று தெரியாமல், துக்கிப்போடவும் மனமில்லாமல் அப்படியே சேமித்து வைத்திருப்போம்.

இப்படி  வீணாகச்  சேரும் பைகளை நாம் மாடித்தோட்டதில் காய்கறி வளர்க்க பயன்படுத்தலாம்.

மாடித்தோட்டங்களில் மண் தொட்டிகளுக்கு பதிலாக grow bags என்னும் வளர்ப்பு பைகளை பயன்படுத்துவது அதிகமாகியுள்ளது, இவை  பெரும்பாலும் நைலான் அல்லது polypropelene போன்ற நெகிழி பொருட்களால் செய்யப்பட்டவை, சராசரியாக 50 ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது.

துணிக்கடைகளில் நமக்கு தரப்படும் பைகள் polypropelene ஆல் செய்யப்பட்டவை, நாம் இதனையே  grow bags ஆக பயன்படுத்தலாம்.


1. முதலில் பையை உள்ளிருந்து வெளியாக திருப்பிக்கொள்ள வெண்டும்/
2. அடிப்பகுதி தட்டையாக இல்லாவிடில் அவ்வறு வரும்படி மடித்து தைக்க வேண்டும்.
3. அடிப்பகுதியில் உலர்ந்த இலைகள், குச்சி, அல்லது coco peat போன்றவற்றை இட்டு  நிரப்ப வேண்டும்
4. இதற்குமேல், மண் ,மற்றும் மண்புழு கழிவு அல்லது மட்கியுரம் கொண்டு மேல் வரை  நிரப்ப வேண்டும்
5. அனைத்து பக்கங்களிலும், மேலிருந்து கீழ் வரை (2 mm அளவுக்கு)
சிறுதுளைகளையிட வேண்டும்.

துணிக்கடை grow bag தயார் .


நேரடியாக விதைகளையோ, அல்லது நாற்றுகளையோ நடலாம். இந்த வகை பைகளின் மூலம்  மண்மாற்றுவது, கிழங்கு அறுவடை செய்வது போன்றவை மிகவும் சுலபமாக இருக்கிறது.