Friday, October 03, 2008

வண்டி எண் 103

"வண்டி எண் 103 தாம்பரம் விழுப்புரம் வழியாக புதுச்சேரி செல்லும் துரித பாசஞ்சர் இன்னும் சற்று நேரத்தில் நான்காவது நடைமேடைக்கு வந்து செல்லும்" என்று கரகரத்த குரலில் வரும் அறிவிப்பைக்கேட்டு வேகமாக நடைமேடை நான்கை நோக்கிச்சென்றால். அங்கு நிதானமாக வரும் WDM 3d ERODE முன்னால் இழுத்துவர பின்னால் 9 பெட்டிகள் கொண்ட வண்டி தெரியும்.

வண்டியில் ஏறி இடம் பிடித்து உட்காருவது பெரும்பாலும் பிரச்சனை இல்லை, முகூர்த்த நாட்கள் ,மேல்மருவத்தூர் திருவிழா போன்ற சமயங்களில் மட்டும் கூட்டம் கொஞ்சம் இருக்கும்.

மகேந்திரா சிட்டி ஐ.டி மக்கள், மறைமலை நகர் தொழிலாளர்கள், SRM மாணவர்கள், வங்கி ஊழியர்கள், சென்னையில் குடித்தனம் இருந்து வெளியூர் பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்கள் என்று வண்டி முழுவதும் சீசன் டிக்கட் கூட்டம் தான் இருக்கும்.

அவ்வப்போது செவ்வாடை அணிந்த மேல்மருவத்தூர் பக்தர்களும் வருவார்கள்.

காலை 6 30 க்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு 10:50க்கு புதுவை செல்லும். காலை வேளைகளில் கில்லி மாதிரி டைமுக்கு வந்துவிடும் ஆனால் மாலையில் மெகா சொதப்பலாக வரும் அபகீர்த்தி இந்த வண்டிக்கு உண்டு.

வேகமென்றால் வேகம் அப்படி ஒரு வேகம். கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு சுமார் 11 நிமிடத்தில் சென்றுவிடும். குளிர் காலங்களில் மூடுபனியைக் கிழித்துக்கொண்டு செல்லும் அழகை இந்தப்படத்தைப் பார்த்தாலே தெரியும்.




மற்ற வண்டிகளைப்போல அதிகம் வியாபாரிகளைக் காண முடியாது, ஒரே ஒரு சுண்டல்காரர் மட்டும் விடாமல் வருகிறார்.

ரெயில்வே நிர்வாகம் இந்த வண்டியை இயக்கும் விதமே அலாதியனது. இன்னதுதான் என்றில்லாமல் பல வித என்ஞின்களை பொருத்துவார்கள். ஆரம்பத்தில் ஈரோடு WDM3d, பிறகு டிசல் தட்டுப்பாடு ஏற்ப்பட்ட பிறகு WAP-4 Arakkonam எஞ்ஜினும் போட்டார்கள் , பிறகு என்ன ஆனதோ, பலவிதமான எலெக்ட்ரிக் எஞ்ஜின்களை பொருத்துகிறார்கள், WAG7 போன்றவை, ஒரு முறை துக்ளகாபாத் எஞ்ஜினைக்கூட பொருத்தினார்கள். இது போதாதென்று ICFல் ரிப்பேர் செய்யப்படும் ரெயில் பெட்டிகளை இந்த வண்டியில் இணைத்து சோதனை ஓட்டம் விடுவார்கள்.

பல நாட்கள் இந்த ரெயிலில் பயணம் செய்திருக்கிறேன், இப்போது புதிய வேலையில் சேர்ந்திருப்பதால் 103 ல் போகவேண்டிய தேவை இல்லை. I miss it.