Sunday, November 05, 2017

மின்சிக்கனம் தரும் துரியற்ற நேர் மின்னோட்ட மின்விசிறி (BLDC Fans)

கடந்த சில வருடங்களாக, ஒளிதரும் குண்டு பல்புகள்,குழல் விளக்குகளை ஓரங்கட்டி குறைந்த அளவே மின்சாரம் தேவைப்படும் எல்ஈடி  விளக்குகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

ஆது போலவே வீட்டு உபயாக மின் சாதனங்களில் அனைவராலும் அதிகமாக பயன் படுத்தப்படும் மின்விசிறிகளிலும் மின் சிக்கனம் தரும் வகையில் அறிமுகமாகியுள்ளது  துரியற்ற நேர் மின்னோட்ட மின்விசிறி (Brushless DC Fans)

இவ்வகை மோட்டார்கள் புதியதன்று பண்டையகால(!) ஃப்ளாப்பி டிஸ்க் படிக்கும் கருவியின் மோட்டார் இந்த வகையை சார்ந்ததே எனினும் சந்தயில் பயன் படுத்தக்கூடிய மின்விசிறியாக இந்த மோட்டர் சில ஆண்டுகளாகவே கிடைக்கிறது

ஒரு சாதாரண மின்விசிறிக்கு சுமார் 80W மின்சாரம் தேவை, ஆனால் BLDC மின்விசிறிக்கு 28W மின்சாரமே தேவை

ஒரு நாளில் சராசரியாக 12 மணிநேரம் ஓடும் சாதாரண மின்விசிறியால் ஆண்டுக்கு 350 யூனிட் மின்சாரம் செலவாகும், அதுவே BLDC மின்விசிறி 120 யூனிட் மின்சாரமே எடுத்துகொள்ளூம் என்பதால், யூனிட் ஒன்றிற்கு 6 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 1400 ரூபாய் சேமிப்பு கிடைக்கும்.


மோட்டார் 12V நேர் மின்னோட்டட்தில் ஓடுவதால் சில மாற்றங்கள் செய்து சூரிய சக்தி தகடுகளுடன் (Solar panel) நேரடியாக இணைக்கலாம். இல்லாவிடில் சாதாரண 230V AC இணைப்பிலும் ஓடும்.

அமேசான்,ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் 3000 ரூபாய் விலையிலிருந்து சாதாரண உள்ளூர் பிராண்ட் தயாரிப்பு கிடைக்கிறது



Surya,Havells போன்ற ப்ராண்ட் நிறுவனங்கள் 5000 ரூபாய் அளவில் விற்கின்றன. ஃபேன் 8 முதல் 10 ஆண்டுகள் வரும் ஐட்டம் என்பதால்  சேமிப்பை கணக்கிட்டால் அமவுண்ட் ஓகே தான்.





Friday, August 18, 2017

ஜரியா சுரங்கம்- நூறாண்டுகளாக எறியும் தீ

ஜார்கண்ட் மாநிலத்தின் முக்கியமான நிலக்கரி நகரம் தன்பாத். இந்திய நிலக்கரி தேவை பெருமளவு பூர்த்தியாகும் இடம். தன்பாத்தை சுற்றியுள்ள பகுதியில் பல நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ளன.

தன்பாதிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலுள்ள ஜரியா (Jharia) என்னும் ஊரில் மொத்தம் 9 சுரங்கங்கள் உள்ளன, அவற்றில் 7 திறந்த வெளி சுரங்கங்கள் (open cast), மற்ற இரண்டு மூடிய சுரங்கங்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்த சுரங்கங்கள் குத்தகைக்கு விடப்பட்டன, குத்தகைதாரர்கள் பிகாரின் பல பகுதிகளிலிருந்து கூலியாட்களை கொண்டுவந்து நிலக்கரி எடுத்தனர், எந்தவிதமான நவீன உபகரணங்களோ பாதுகாப்போ இல்லாமல் கிடைக்கும் இடங்களிலெல்லம் கரி தோண்டி எடுத்தனர்.

ஜரியாவில் கிடைக்கும் கரி கோகிங் கோல் எனப்படும் வகையை சேர்ந்தது , அதிக மாசற்ற, உயர் எரிநிலை கொண்ட கரியாகும்.

 நிலக்கரி சுரங்கங்கள் மின்னல், வெளிச்சத்திற்காக பந்தம் போன்றவைகளை பயன் படுத்துவது, கரிக்கற்கள் ஒன்றிடன் ஒன்று உராய்வது போன்ற காரணங்களால் தீப்பற்றிக்கொள்ளும், அப்படி 1916ம் ஆண்டில் ஒரு நாள் ஜரியாவில் தீப்பற்றியது, இன்று வரை அணைக்க  முடியவில்லை.
எரியும் சுரங்கத்திற்கிடையே  தொழிலாளர்கள், வியாபாரிகள் அவர்தம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள், அவ்வப்போது பூமியின் அடியில் உள்ள சில வாயுக்கள் வெப்பத்தில் வெடிக்கவும் செய்யும் , நிலம் உள்வாங்கவும் செய்யும்.  இது போன்ற நிகழ்வுகளில் உயிர் இழந்தவர்களும் காயமுற்றவர்களும் பலர் உண்டு


Image courtesy Counterview.org


1974 இந்த சுரங்கங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு பாரத் கோகிங் கோல் நிறுவனத்தின் கீழ் வந்தன, அப்போதும் தீயை அணைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வி அடைந்தன.

பொதுவாக இது போன்ற பெரும் தீயை  திரவ நைட்ரஜன்  கொண்டு அணைக்கலாம். ஆனாலும் அந்த முறையும் பலன் கொடுக்கவில்லை.

இந்த தீயினால் இதுவரை சுமார்  12 லட்சம் கோடி ரூபாய்  மதிப்பிலான நான்கு கோடி டன் கரி  எறிந்து வீணகியுள்ளது மேலும் பல லட்சம் கோடி மதிப்பிலான 200 கோடி டன் கரி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

உலகளவில் நிலக்கரி சுரங்கங்களில் சராசரியாக 1000ம் மேற்பட்ட இடங்களில் தீ பற்றி எறிந்துகொண்டிருக்கிறது

தொடர்புடைய சுட்டிகள்
Fresh move to douse Jharia’s coal fires
Burning for over 100 years, Jharkhand’s underground fire affects 5 lakh people








Wednesday, September 30, 2015

அபினிப் போர்கள் - IBIS Trilogy. நூல் விமர்சனம்

இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் சிறந்த கதைசொல்லியும், கனத்த அறிவியல்/வரலாற்றுத் தரவுகளுடன் புனைவுகளை யாப்பவருமான  அமிதாவ கோஷ் அவர்களின் ஆகச்சிறந்த படைப்பாகும்  IBIS Trilogy என்னும் மூன்று நூல்களைக்கொண்டதொகுப்பு.








சீனத்திற்கும் பிரிட்டிஷாருக்குமிடையே நடந்த அபினிப்போர்களை பின்புலமாக கொண்டது இந்தத் தொகுப்பு.

19ம் நூற்றண்டின் முற்பகுதியில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது, அதனால் புதிய காலனிகளில் வேலை செய்ய இந்தியாவிலிருந்து  கூலிகளை தருவித்தனர், முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை ஏற்றிச்சென்ற கப்பல்களையே, கூலிகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தினர். அப்படி ஒரு கப்பல் தான் IBIS.

போஜ்புரி மொழி பேசும் பூர்வாஞ்சல் பகுதியில் கிழக்கிந்த்திய கம்பனி குடியானவர்களைக்கொண்டு அபினி விளைவித்து சீனத்திற்கு ஏற்றுமதி செய்தது. 

அங்கு ஒருநாள் கணவன் மறைந்ததால் உடன்கட்டை ஏற்றப்பட்ட அதிதி என்ற பெண்ணை சிதையிலிருந்து மீட்கிறான் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த்த கலுவா , பெண்ணின் குடும்பம் துரத்த இருவரும் தப்பி ஓடுகிறார்கள். அப்போது மொரிசியஸ் சென்று கூலி வேலை செய்ய ஆள்எடுக்கும் சேதி கேட்டு, நாட்டை விட்டு தப்பியோட இதுவே சரியான வழி  என்று இருவரும் மொரிசியஸ் செல்ல உடன் படுகிறார்கள்.ஏஜண்டுகளால்  இருவரும் மற்றும் சில கூலிகளும்  படகில் ஏற்றி கல்கத்தாவிற்கு அனுப்பபடுகிறார்கள் 

இதனிடையே நீல் ரத்தன் ஹல்தார் என்னும் பன்மொழிப்புலமை கொண்ட  ஒரு ஜமீந்தாரை சூழ்ச்சி செய்து கடனாளியாக்கி போர்ஜரி வழக்கில் சிக்க வைக்கிறார் கிழக்கிந்திய கம்பனியின் வணிகர் ஒருவர். ஆங்கிலேய நீதிமன்றம் நீல் ரத்தன்  ஹல்தாரை மொரிசியஸிற்கு நாடு கடத்த உத்தரவிடுகிறது.

ஆஹ் ஃ பத், பார்சி அபினி வணிகருக்கும் சீனப்பெண்ணிற்கும் முறைதவறி பிறந்தவன், இவன் போதைக்கு அடிமையாகி தந்தையை தேடி இந்தியா வந்து ஏதோ வழக்கில் சிக்குகிறான்  இவனையும் மொரிசியஸிற்கு நாடு கடத்த உத்தரவிடுகிறது கம்பனி அரசு.

கூலிகளுடன் ஆஹ் ஃ பத், நீல் ரத்தன் ஆகியோரும் IBIS கப்பலில் ஏற்றி அனுப்பபடுகிறார்கள்.

நிகோபார் அருகே கப்பலில் சிப்பாயாக இருந்த அதிதியின் உறவினர் ஒருவர் அவளை அடையாளம் கண்டு  அதனால் ஒரு சிறு கிளர்ச்சி நடந்து  கப்பலிலிருந்து ஆஹ் ஃ பத், நீல் ரத்தன், கலுவா மற்றும் இரு மாலுமிகள்  அகியோர் தப்பிகின்றனர். அப்போது புயல் அடித்ததால் இவர்கள் இறந்ததாக மற்றவர்கள் கருதினர். 

ஆஹ் ஃ பத்  நீல் ரத்தனுடன்   சிங்கப்பூர் அடைந்து அங்கே தன் பார்சி  தந்தையிடம் குமாஸ்தாவாக நீல் ரத்தனை சேர்த்துவிடுகிறான். நீல் ரத்தன் தன முதலாளியுடன் அவரின் கப்பல் நிறைய அபினுடன் சீனம் செல்கிறார். 

சீனத்தில் போதை பழக்கம் பல சமூக பொருளாதார  பிரச்னைகளை கொடுத்ததால் அபினி வணிகத்தை ஒழிக்கபேரரசரின் ஆணைக்கிணங்க குவங்டாங் ஆளுனர் லின் ஜெக்ஸு கறார் நடவடிக்கை எடுத்துஅபினி சரக்குகளை அழிக்கிறார். இதனால் மனமுடைந்த பார்சி முதலாளி தற்கொலை செய்து கொள்கிறார். முதலாளி இறந்தபின் நீல் ரத்தன் சீனர்கள் பக்கம் சாய்ந்து அவர்களுக்காக மொழி பெயர்ப்பு வேலைகளை செய்கிறார்.

சீன அரசு நடவடிக்கையால் வெகுண்ட ஆங்கில வணிகர்கள் பிரிட்டிஷ் அரசை நிர்பந்தித்து  இந்திய சிப்பாய்கள்  மற்றும் போர்கப்பல்கள் கொண்ட படையை திரட்டி சீனத்தை போரில் வென்று  ஹாங்காங் நகரை எழுதி வாங்குகின்றனர். சீனர்கள் அபின் வர்த்த கெடுபிடிகளையும் தளர்த்தினர்.

ஆசிரியர் இந்த வரலாற்று நிகழ்வுகளை நீல் ரத்தன் , அதிதி, பார்சி வியாபாரி பஹ்ரம் , IBIS கப்பலின் மாலுமி ஜக்காரி ரீட் (இவன் ஒரு அமெரிக்கன் பின்னாளில் அதே கப்பலின் காப்டனாவும் தேர்த்த அபின் வியாபாரியாகவும் ஆகிறான்), கிழக்கிந்திய கம்பனின் சிப்பாய் கேசரி சிங் மற்றும் அவரின் அதிகாரி காப்டன் மீ ஆகியோரின் வாயிலாக அழகாக நடத்தி செல்கிறார்.

கிழக்கிந்திய கம்பனி வலுக்கட்டாயமாக விவசாயிகளை அபின் பயிரிட செய்தது , அவ்வாறு விளையும் பயிரை தங்களுக்கே அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டும் என்று கட்டாயபடுத்தியது , விலை கட்டுப்படி ஆகாததால் விவசாயிகள் கடனாளியானது, கடன்பட்ட சில குடும்பங்களிலிருந்து  சம்பளத்திற்கு சிப்பாய்களையும் மற்ற சில வீடுகளுக்கு அட்வான்ஸ் கொடுத்து வெளிநாட்டு கூலி வேலைக்கு ஒப்பந்தம்  போட்டது போன்ற தகவல்களை தருகிறார் ஆசிரியர்.

மேலும் ஷோக்காளி கல்கத்தா ஜமீந்தார்களின் வாழ்க்கை, அவர்களை நைஸாக வளைத்து கடன் வலையில் விழச்செய்யும் கம்பனி சூழ்ச்சி , 
மும்பை பகுதியில் கப்பல் கட்டுமானத்தில் ஈடுபட்ட பார்சி குடும்பங்களை அந்த தொழில் செய்ய விடாமல் தடுத்து (அப்போது தான் ஆங்கில கப்பல் கம்பனிகளுக்கு பாதிப்பு வராது) அவர்களை போதை பொருட்களை கப்பலில் ஏற்றி செல்ல வைத்த வரலாற்று தகவல்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

வெறும் மூவாயிரம் வீரர்களும், சில போர்கப்பல்களையும் மட்டுமே கொண்டு குவங்டாங் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர் ஆங்கிலேயர். அப்போதய  சீனப்போர்கப்பல்கள் மிகவும்  சிறியவை அய்ரோப்பிய கப்பல்களின் பலத்தின் முன்னால் நிற்க முடியாமல் திணறின , கடற் போரில் வெல்ல முடியாது என்று சீனர்கள் உணர்ந்து நிலத்துக்குள்ளே ஆங்கிலப்படைகளை வர வைத்தனர், ஆனால் சீனர்கள் அமைத்த அரண்கள் பிரிட்டிஷ் பீரங்கிகளுக்கு முன்னால் தவிடு பொடியாயின, சீனர்களின் துவக்குகளும் காலாவதியானவை , மேலும் முறையான பயிற்சியில்லாமல் அவசர கதியில் உள்ளுர் மக்களைக்கொண்டு அமைக்கப்பட்ட படைகளும் சிதறி ஓடின.

இந்த நிதரிசனத்தை மேலிடத்திற்கு தெரிவிக்காமல் போரில் நாம் வென்றோம் என்றே தலைநகருக்கு தகவல் சொல்லினர் சீன மாண்டரின்கள். இவர்கள் தந்த செய்தியை நம்பி மேலும் படைகளை அனுப்பாமல் விட்டது மேலிடம். விளைவு நிலைமை கையை மீறிச்சென்று இறுதியாக சரணடைகிறது சீனம்.

ஆசிரியரிடம் ஓரு academic rigour தெரிகிறது , முன்பு இவரின் Hungry Tide படைப்பிலும் இதனை காணலாம், புனைவு என்றலும் தேதிவாரியாக பல உண்மை நிகழ்வுகளுடன் சம்பவங்கள் ஒத்துப்போகின்றன, அராய்ச்சி கட்டுரையைப்போல நூலின் இறுதியில் பல பக்கங்களுக்கு ஆதாரக்குறிப்புகளைதந்திருக்கிறார். இந்தியாவில் அராய்ச்சி செய்த ஒரு பிரஞ்சு தாவரவியல் ஆய்வாளர் மற்றும் அவர் மகளின் கிளைக்கதையும் உண்டு இதிலும் இந்திய சீன தாவரங்களை ப்பற்றிய அறிய குறிப்புகளை தந்துள்ளார்.


ஆசிரியருக்கு புயல் என்றால் அலாதிப்பிரியம் என்று நினைக்கிறேன்.  முதல் பாகத்தின் இறுதியிலும் மூன்றம் பாகத்தில் இறுதியிலும் புயல் அடிக்கிறது உதனால் சம்பவங்களின் போக்குமாறுகிறது, இதே போன்று அவரின் முந்தைய Hungry Tide நாவலின் இறுதியிலும் புயல் முக்கிய பங்கு பெறுகிறது.


இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களில் பல நிகழ்வுகள் இரு பாத்திரங்களுக்கிடையே கடிதமாக விவரிக்கப்பட்டிருக்கிறது, விரிவஞ்சி இதனை செய்திருந்ததாலும் சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

Friday, January 16, 2015

துணிக்கடை பைகளில் காய்கறி வளர்ப்பு

துணிக்கடைகளில் நமக்கு கிடைக்கும் கட்டைப்பைகள், பெரிய நைலான் பைகள் போன்றவற்றை என்ன செய்வது என்று தெரியாமல், துக்கிப்போடவும் மனமில்லாமல் அப்படியே சேமித்து வைத்திருப்போம்.

இப்படி  வீணாகச்  சேரும் பைகளை நாம் மாடித்தோட்டதில் காய்கறி வளர்க்க பயன்படுத்தலாம்.

மாடித்தோட்டங்களில் மண் தொட்டிகளுக்கு பதிலாக grow bags என்னும் வளர்ப்பு பைகளை பயன்படுத்துவது அதிகமாகியுள்ளது, இவை  பெரும்பாலும் நைலான் அல்லது polypropelene போன்ற நெகிழி பொருட்களால் செய்யப்பட்டவை, சராசரியாக 50 ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது.

துணிக்கடைகளில் நமக்கு தரப்படும் பைகள் polypropelene ஆல் செய்யப்பட்டவை, நாம் இதனையே  grow bags ஆக பயன்படுத்தலாம்.


1. முதலில் பையை உள்ளிருந்து வெளியாக திருப்பிக்கொள்ள வெண்டும்/
2. அடிப்பகுதி தட்டையாக இல்லாவிடில் அவ்வறு வரும்படி மடித்து தைக்க வேண்டும்.
3. அடிப்பகுதியில் உலர்ந்த இலைகள், குச்சி, அல்லது coco peat போன்றவற்றை இட்டு  நிரப்ப வேண்டும்
4. இதற்குமேல், மண் ,மற்றும் மண்புழு கழிவு அல்லது மட்கியுரம் கொண்டு மேல் வரை  நிரப்ப வேண்டும்
5. அனைத்து பக்கங்களிலும், மேலிருந்து கீழ் வரை (2 mm அளவுக்கு)
சிறுதுளைகளையிட வேண்டும்.

துணிக்கடை grow bag தயார் .


நேரடியாக விதைகளையோ, அல்லது நாற்றுகளையோ நடலாம். இந்த வகை பைகளின் மூலம்  மண்மாற்றுவது, கிழங்கு அறுவடை செய்வது போன்றவை மிகவும் சுலபமாக இருக்கிறது.



Tuesday, December 16, 2014

அடுக்குமாடி குடியிருப்பில் மக்கியுரம், வடிகரைசல் தயாரிப்பு

அடுக்ககத்தில் மக்கியுரம் (compost), வடிகரைசல் தயாரிப்பு

மாடித்தோட்டம் குறித்து சமீப வருடங்களில் நல்ல விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது, இதன் கூடவே நகர்புரங்களில் உருவாகும் குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து மக்கும் குப்பையை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பையை மறு சுழற்சியும் செய்ய வேண்டும் என
பிரச்சாரமும் நடக்கிறது.

வீட்டில் உருவாகும் காய்கறி கழிவுகளிலிருந்து மக்கியுரம் தயாரிக்க நிறைய இடம் தேவை, நகரங்களில் எளிதில் கிடைக்காத சாணம் போன்றவை தேவை, இதனால் துர்நாற்றம் வரும், ஈக்கள் பூச்சிகள் போன்றவை வீட்டிற்க்குள் வரும் என்பது போன்ற பல சங்கடங்களால் குப்பை தரம் பிரிப்பதை தவிர்க்கிறார்கள்.

ஆனால் உண்மையில் , அடுக்குமாடி குடியிருப்பில் கூட எளிமையாக காய்கறி கழிவிகளிலிருந்து மக்கியுரம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள். ஒரே அளவுள்ள இரண்டு பிளஸ்டிக் வாளிகள் . (பெயிண்ட் வாளிகள்).


இரண்டு வாளிகளில் ஒன்றின் அடியில் நிறைய சிறு துளைஅகளைப் போட வேண்டும் துளியிடப்படாத வாளியை கீழே வைத்து, துளையிட்ட வாளியை அதன் மேலே வைக்க வெண்டும். 

மேல் வளியில் கொஞ்சம் உலர்ந்த இலைகளை இரண்டு அங்குலம் அளவுக்கு நிரப்ப வேண்டும், பின்னர் அன்றாட காய்கறிக் கழிவுகளை இட்டு வர வெண்டும், இரண்டு அங்குலம் கழிவு சேர்ந்ததும் ஒரு அங்குலம் அளவுக்கு ஈரமண் அல்லது மண்புழு கழிவு போட்டு மூடவேண்டும், பின்னர் மீன்டும் காய்கரிகழிவுகளை போடவேன்டும், இப்படியாக வாளி நிரையும் வரை கழிவுகளை இட்டு நிரப்பலாம்.



சரசரியாக இரண்டு வாரங்களில்(5லி) வாளி நிரம்பும். பூச்சி,துர்நாற்றம் போன்றவை வராமல் தடுக்க மூடியைக்கொண்டு மூடலாம்.


இந்த வாளியில் இருக்கும் கழிவு நொதித்து வரும் சுமார் 6 வாரங்களில் முழுவத்தும் மக்கி நல்ல உரமாகும். மேலும் கீழ் வாளியில் திரவ நிலையில் anaerobic waste வடிகரைசல் தேங்கும் இதனை சேகரித்து வரவேண்டும்.

.

வடிகரைசலை ஸ்ப்ரேயர் கொண்டு நேரடியாகவோ அல்லது நீரில் 1:10 என்ன்னும் விகிதத்தில் தளர்த்தியோ செடிகளுக்கு இடலாம்.

இது போன்ற முன்று செட் வாளிகளைக்கொண்டு மாற்றி மாற்றி உரம் தயாரிக்கலாம். குப்பைகளை குறைக்க உதவலாம்.

Sunday, July 03, 2011

தொட்டியில் வெள்ளிக்கிழங்கு




கடந்த ஆண்டு கடையில் வாங்கிய சர்க்கரை வெள்ளிக்கிழங்கில் ஒன்று மிகச்சிறியதாக இருந்தது, அதல் முளைபோன்ற ஒன்று தென்பட்டது. ஏற்கனவே சில முறை சேப்பங்கிழங்கை தொட்டியில் நட்டு விளைவித்திருந்ததால் , வெள்ளிக்கிழங்கை நட்டால் என்ன என்று ஒரு தொட்டியில் பதித்தேன், சில மாதங்களுக்கு பிறகு தோண்டிய போது ஒரு சிறிய தேங்காய் அளவுக்கு வளர்ந்திருந்தது.

கிழங்கை பிரித்தபின் மேலிருக்கும் இலைகளை மீண்டும் தொட்டியில் நட்டேன். சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு எடுத்து பார்த்தபோது, தொட்டி முழுமைமும் கிழங்குகளாக இருந்தது. அறுவடை செய்து சாப்பிட்டாகி விட்டது, அபார ருசி.




நானிருப்பது மூன்றாவது மாடியில் என்றாலும், எதிரே மாடியிருக்கும் பெண்ட்ஹவுஸ் போன்ற அபார்ட்மெண்ட் என்பதால், சிறிய அளவிலான தோட்டம் வைத்துள்ளேன். இதுவரை பூக்கள், கத்திரி வெண்டை, கீரை தவிர, சேப்பங்கிழங்கு, ரும்பு, கேழ்வரகு, பிரண்டை, மஞ்சள் ஆகியவைகளை விளைவித்துள்ளேன்.

Sunday, June 05, 2011

மெட்ரோவா மோனோவா?

மெட்ரோவா மோனோவா என்றால் நான் சந்தேகத்திற்கிடமின்றி மோனோ கட்சி. வெகு சீக்கிரம் கட்டுமானம் முடிந்து போக்குவரத்தை துவக்க சிறந்த முறை மோனோரயில். ரயில் பாதைகல்ள் போலல்லாமல் மோனோ ரயில் ட்ராம் போன்ற போக்குவரத்தை சேர்ந்தது என்பதால் மாநில அரசே பல முடிவுகளை எடுக்கலாம். Serendipity யோ என்னவோ , கடந்த வாரம் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வந்த மோனோரயில் பற்றிய கட்டுரை கவனத்தை கவருகிறது.


***
பல கோடிகளைக் கொட்டி இன்னும் நிறைவு பெறாமலிருக்கும் MRTS திட்டத்தை இங்கு நினைவு கூறுவது அவசியம். ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து கிலோமீட்டர் என்னும் ரீதியில் நத்தை வேகத்தில் நடந்து வரும் திட்டம் இது. சென்னை நகரில் உள்ள போக்குவரத்து சூழ்நிலைகள், இங்குள்ள பேருந்து கட்டணம், கடைசி மைல் இணைப்புகள் போன்ற தகவல்களை உள்வாங்காமல் தில்லியில் இருந்து ஒரு திட்டத்தை செயல் படுத்தினால் என்னவாகும் என்பதற்கு MRTS ஒரு சாட்சி.
இந்தியில் எடுத்து , தமிழில் டப் செய்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் மத்திய அரசின் த்ராபை விளம்பரங்களைப் போல MRTS காட்சியளிக்கிறது.


***
பெரியவருக்கு பிகில் ஊதப்பட்டதிலிருந்து இந்த நிதி அந்த நிதி என்று எந்த சானலிலும் விளம்பரங்கள் இல்லாததால் பேரன்மாரின் உபத்திரவமின்றி டி வி பார்க்க முடிகிறது.

***
அடையாரின் மெர்சி எலெச்ட்ரானிக்ஸ் எனக்கு பத்து வருடங்களாக பரிச்சயம். அங்கு விற்க்கப்படும் அனைத்துமே டுபாக்கூர் என்று நண்பர்கள் பலர் கூறினாலும் நான் வாங்கிய எந்தப்பொருளும் வீண்போனதில்லை. பெரும்பாலும் டூப்பிளிகேட் சரக்கையே விற்கும் மெர்சிக்கு போட்டியாக மென்சி எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் வேளச்சேரியில் ஒரு கடை. டூப்பிளிகேட்டுக்கே டூப்பிளிகேட்டா, என்ன கொடுமை சார் இது.

Sunday, January 30, 2011

எகிப்து - அடுத்தது என்ன?

துனிசியாவில் கொளுத்திப்போட்டது இப்பொழுது எகிப்தில் வேட்டு வைகக்கும் அளவுக்கு வந்துள்ளது. ஆடுத்து எகிப்தில் என்னென்ன நடக்கலாம் என்று ஒரு சிறு பார்வை.


1. திக்கித்தடுமாறி முபாரக் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டால் விரக்தி அடைந்த ஒரு சிறு குழு தீவிரவாத கிளர்சியில் ஈடுபடும் வாய்ப்புண்டு. இருக்கும் பிரச்னை போததென்று ஒரு புதிய தலைவலி மத்திய கிழக்கில் ஏற்படும்.

2. ஆட்சி மாற்றம் நிகழ்ந்து எல் பரடேய் போன்ற மிதவாத மேற்கு சார்புடைய லிபரல் அரசு அமையலம்.

3. அல்லது மதவாதிகளிடம் ஆட்சி போகலம். இதையே சக்காக வைத்து இஸ்ரேல் தன் எல்லைகளை பலப்படுத்தும். காசா பகுதியை முற்றிலும் சுற்றி வளைக்கலாம்.

மேற்சொன்ன 2 அல்லது 3 நடந்த்தால் யேமென், லிபியா, அல்ஜீரியா, சிரிய அரசுகள் அடுத்தடுத்து கவிழும்.


இப்பொழுது பீதியைக் கிளப்பும் சில சூழ்நிலைகளை காண்போம்.

1. தற்போது வரை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவத்தில் பிளவு வரலாம். மக்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு சில தளபதிகள் நாட்டில் சில பகுதிகளை தன் வசப் படுத்தலாம். இதன் காரணமாக குழு மோதல் உருவாகி உள்நாட்டுப் போராக மாறலாம். கெய்ரோ நகரை கூறுபோட்டு மாறி மாறி சண்டை நடக்கும். காபுல் (1990-95) , மோகாடிஷு (1993- இன்றுவரை) போன்று கெய்ரோவும் மாறலாம்.

2. ஸ்திரத்தன்மை அற்ற ஒரு அரசு உருவாகி விரைவிலேயே கவிழ்ந்து உள்நாட்டுப் போர் மூளலாம். அரசியல் கட்சிகள் ஆளுக்கு ஒரு படை திரட்டி நாட்டை வசப் படுத்த கடுமையாக மோதிக் கொள்ளும்.




Tuesday, September 21, 2010

கைதியின் தயக்கம் – ஆட்டக்கோட்பாடு (Game Theory)


ஒரே குற்றத்தில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளை போலிஸ் தனித்தனியே விசாரிக்கின்றது. இரண்டு கைதிகளிடமும் இந்த மூன்று தகவல்களை தருகின்றது.



1. இருவரும் குற்றத்தை ஒப்புக்கொளாமலேயே ஆளுக்கு 2 ஆண்டுகள் தண்டனை அளிக்கிககூடிய அளவுக்கு சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன.
2. இருவரில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு மற்றவரை காட்டிக்கொடுக்கும் பட்சதில், காட்டிக்கொடுக்கும் நபருக்கு ஒரு ஆண்டு தண்டனையும் மற்றவருக்கு 4 ஆண்டு தான்டனையும் கிடைக்கும்.
3. இருவருமே ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கும் பட்சத்தில் நேரடி சாட்சியங்கள் பலமாகி இருவருக்கும் 4 ஆண்டு சிறைவாசம் கிடைக்கும்.



ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தொடர்பு கொள்ள அனுமதி கிடையாது.
இந்த சூழ்நிலையில் ஒரு கைதி எப்பேர்பட்ட முடிவை எடுப்பார்?
ஒரு கைதி அமைதிகாப்பான் என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் இன்னொரு கைதியால் அமைதி காக்க இயலாது.



அறிவுப்பூர்வமாக் யோசிக்கும் பொழுது அமைதி காப்பதே நல்லது என்று தோன்றினாலும் , பெரும்பாலான சமயங்களில் பரஸ்பர நம்பிக்கையின்மை காரணமாக இருவருமே பாதிக்கப்படுவது தான் நடக்கும்.



இதுவே ஆட்டக்கோட்பாட்டில் கைதியின் தயக்கம் (Prisoner’s dilemma) என்று சொல்லப்படுகிறது.



இந்த வகையான ஆட்டக்கோட்பாட்டை இந்திய சமூக சூழ்நிலையில் பொருத்தி அதன் மூலம் இந்தியாவின் மோசமான அரசுக்கட்டமைப்பு, விதிகளை மதியாமை, பின் தங்கிய சுகாதாரம், ஒழுங்குமுறையின்மை ஆகியவற்றின் காரணிகளை நிறுவ முயல்கிறார் Games Indians Play நூலின் ஆசிரியர் வி. ரகுநாதன்.



ஒரு சில சோதனைகளின் மூலம் மற்ற வளர்ந்த நாட்டு மக்களை விட இந்தியர்களுக்கு சுயக்கட்டுப்பாடும் , சமூக ப்ரக்ஞையும், குறைவு என்பதை நிரூபித்துள்ளார்.



பொதுவாகவே இந்தியச்சூழலில் வெகுஜன அறிவியல் (Popular Science) புத்தகங்கள் குறைவு, அதுவும் பொருளாதாரம், அரசியல் போன்ற சமூக அறிவியல் துறைகளில் ரொம்பவுமே குறைவு. குறிப்பாக உணர்ச்சிவசப்படாத, கொள்கையை திணிக்காத எழுத்துக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இந்த நூல் க்ளிஷேக்களை தவிர்த்து நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளது. நமக்கு இது தான் தேவை.

Sunday, August 29, 2010

சம்பூர்ண ராமாயணம் முதல் சன் டிவி ராமாயணம் வரை

சம்பூர்ண ராமாயணம் முதல் சன் டிவி ராமாயணம் வரை வெளிவந்த்துள்ள அனைத்து புராணப்படங்களிலும் புராணத்தொடர்களிலும் ஒரு அபத்தக்காட்சி மீண்டும் மீண்டும் வந்து தொலைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது எதிரெதிர் தரப்பு சண்டையிடும் பொழுது எய்தப்படும் அம்புகள் நேர்கோட்டில் பயணித்து ஒன்றுடன் ஒன்று இம்மி பிசகாமல் மோதும். இதுவரை வந்துள்ளை அனைத்துப்படங்களிலும் அனைத்து அம்புகளும் நேரெதிராக மோதியிருக்கின்றன. முதன் முதலில் யாரோ ஒரு எடிட்டர் செய்த ஒட்டுவேலையை இன்றுவரை கொஞசம் கூட முன்யோசனையில்லாமல் காப்பி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். யோசிங்கப்பா.

ஒருமுறை பீட்சா ஹட்டில் சாப்பிட்ட கார்லிக் பிரெட்டின் சுவை என் நண்பர் மற்றும் முன்னாள் பாஸ் ரங்காவிற்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. என்னிடம் சொன்னார். நான் “அது ரொம்ப சிம்பிள் பாஸ், வீட்டிலேயே செஞ்சிடலாம், சாதா ப்ரிடட்டில் ஜிஞ்சர் கார்லிக் பேஸ்டை தடவி, நெய்யில் டோஸ்ட் செஞ்சிடுங்க. போதும்” என்றேன். அடுத்த திங்கட்கிழமை என்னிடம் வந்து “ஒங்க ரெசிபி சூப்பர் தல” என்றார். “அப்படியா பாஸ், நான் குன்சாக அடிச்சி விட்டேன் அதுதான் கார்லிக் பிரெட் ரெசிபியா?” என்று கேட்டேன்.

விப்ரோ ஆக்சென்ச்சர் என்று இரு மலைகளிக்கிடயே குறிச்சியாக புதிய அலுவலகம். நல்ல வசதியாக இருந்த்தாலும் ஒரு சங்கடம். ஆபிஸின் பின் வாசலில் ஒரு டீ+ஸ்னாக்ஸ் கடை, மேற்சொன்ன இரு கம்பெனி தம்மர்களும் சதா சர்வ காலமும் எங்கள் ஏரியாவிற்கு அருகே வந்து ஊதித்தள்ளுகிறார்கள். அந்தப்பக்கம் போனாலே புகை மண்டலத்தில் ஊட்டி/சொர்கத்தில் இருப்பது போல ஒரு ஃபீலிங். பாவம் கடைக்காரர். Bloody smokers.

Thursday, May 20, 2010

குருவி காப்போம்

சமீப காலமாக சிட்டுக்குருவிகள் காணாமல் போனதைப்பற்றி கவலைப்பட்டு நிறைய ஆதங்ககளை படிக்கவும் கேட்கவும் செய்கிறோம். குருவிகள் தவிர பல புள்ளினங்கள் நகர்புறப்பகுதிகளிலிருந்து விடைபெற்றுள்ளன.

நான் வசிக்கும் பெசன்ட் நகரில் இந்த பிரச்னை சற்று குறைவு தான். அன்றாடம் சிட்டுக்கிருவி, இரட்டைவால் குருவி, மைனா, மீன்கொத்தி இவைகளைப் பார்க்கிறேன் நகரின் ஒரு ஓரத்தில் இன்னும் மரங்கள் அடர்ந்து இருப்பதால் அதிக பாதிப்பில்லை போலிருக்கிறது.பறவைகள் இடம்பெயர்வதற்கு காரணம் வாகனப்புகையும் தானியங்கள் கிடைக்காததுமே தான்.

வீட்டுக்கு நான்கு வண்டி வைத்துக்கொள்ளும் அக்கப்போர்களை தவிர்த்து மரங்களை வளர்த்தால் குருவி காக்கலாம்.

******

மணிப்பூர் மக்களுக்கும் நாகாலாந்து மக்களுக்கும் திடீர் பிரச்னை வெடித்து மணிப்பூர் மாநிலம் முடங்கியுள்ளது. இந்தியாவில் மற்ற பகுதி மக்களுக்கு மணிப்புரிக்கும் நாகாவுக்கும் மொழியை வைத்தோ ஆளைவைத்தோ அடையாளம் சொல்லத்தெரியாது. இவ்வாறிருக்க உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பது போல் சண்டையிடுவது அனாவசியம்.

கூடுவாஞ்சேரியை விட சிறிய தலைநகரங்களைக்கொண்ட பகோடா போன்ற அளவேயுள்ள சிறுமாநிலங்களை வடகிழக்கில் அமைத்ததால் வந்த வினை இது. வடகிழக்கில் இருக்கிற பிரச்னை போதாதென்று போடோலேண்ட், கேரோலேண்ட் என்று புதிய மாநில கோரிக்கைகள் வேறு.

******

இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு வங்கிகளுக்குள் நடக்கும் அக்கப்போர்களை மையமாக வைத்த புதினம் If God was a Banker. இந்த கதைக்களம் இந்தியாவிற்குப் புதிது. நல்ல விறுவிறுப்பான எழுத்து நடை. தடாலடியான வட இந்தியர் நிதானமான ஒருவர் தென் இந்தியர் ஒருவர் என்று இரண்டு வங்கி நிர்வாகிகளை முக்கிய கதைமாந்தர்களாக வைத்து புனையப்பட்டுள்ளது(?) இந்த நாவல். ஆசிரியர் ரவி சுப்ரமணியம். ஆகவே முக்கியப்பாத்திரம் யார் என்று யூகிக்க அதிக நேரம் எடுக்காது.

தனியார் , பன்னாட்டு வங்கிகளின் செயல்பாடுகளைப்பற்றி கேள்விப்பட்டது எல்லாம் இந்த நாவலால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பாத்திரங்கள் ஒரு மாதிரி ஸ்டீரியோ டைப்டாக உள்ளது . வடக்கதியர்களை எதற்கு அஞ்சாத அயோக்கிய ராஸ்கல்களாகவும் தெற்கத்தியவர்களை நேர்மை சிகாமணிகளாகவும் சித்தரித்ததை தவிர்த்திருக்கலாம்.

இருந்தாலும் சில வட இந்திய எழுத்தாணிகள் நம்மவர்களை அநியாயத்திற்கு வாறுவதைப்பார்க்கையில் இதெல்லாம் ஒன்றுமேயில்லை


Thursday, April 15, 2010

TV துளிகள்


SS Music இல் கடும் காம்பியர் பஞ்சம். கிட்டத்தட்ட எல்லா நிகழ்சிகளிலும் பலோமா ஒண்டி ஆளாக ஊடு கட்டுகிறார். அவ்வபோது பூஜா தலைகாட்டுகிறார். பலோமா கேமரா கோணத்தை கூட மாறாமல் விதவிதமாக உடை(!)களை மட்டும் மாற்றி நிகழ்சிகளை வழங்குகிறார். கேமராமேன் கூட படப்பிடிப்பு ஆரம்பித்ததும் கேமராவை நிலைபெறச்செய்து விட்டு "பாப்பா நீயே ஷோ முடிஞ்சதும்கேமராவை ஆஃப் பண்ணிடு" என்று வீட்டுக்கு கிளம்பிவிடுவார் போலிருக்கிறது.



-----

NDTV HINDU வில் கேமரா பஞ்சம். ஸ்டுடியோவில் யாரையாவது வைத்து பேட்டி எடுக்கும் போது கேமரா உரையாடும் இருவரில் ஒருவரை மட்டுமே காட்டுகிறது. சேனல் மாற்றி வரும் போது என்ன மேட்டர் என்று தெரிந்து கொள்வதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது.

----

NDTV HINDU தமிழ் செய்திகளில் காரம் அதிகம். தெகிரியமாக மாநில அரசை தாக்குகிறர்கள். எவ்வளவு தூரம் போகிறது என்று பார்க்கலாம்.

---

IPL ல்விளம்பர வெறி ரொம்பவே ஜாஸ்தியாக உள்ளது. சிக்ஸ் அடித்தால் DLF மேக்ஸிமம் என்றும், கார்பன் கமால் கேச் என்று ஒவ்வொரு பததிற்குள்ளும் ஒரு விளம்பர இடைச்செருகலை செய்கிறர்கள். ஸ்ஸப்பஆஆ

----

காமெடி நிகழ்சிகளை விட சசிதரூர் லலித்மோடி யுத்தம் தமாஷாக இருக்கிறது. எவ்வளவு டீப்பா போறங்க, விட்டா நாலஞ்சு தலைமுறையை தோண்டி எடுப்பாங்க போலருக்கு. என்னைப் பொருத்தவரையில் லலித்மொடியை வெளியுறவு அமைச்சராக போடலாம். சசிதரூர் போன்ற போலி லிபரல் அரைக்கிறுக்கர்களை விட லலித் மோடி போன்ற தடாலடிப் பேர்வழிகள் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர்கள்.

Wednesday, March 03, 2010

கதம்பம்


கீழே கருங்கல் தளம்.

மேலே கருங்கற்கள் பலகைகளாக வைக்கப்பட்ட கூரை.

கூரையை தாங்கிப்பிடிக்க கருங்கல் தூண்.

குறுக்குவாகாக கருங்கல் தூலம்

தூணில் செதுக்கப்பட்ட யாளி

யாளியின் அடியில் துதிக்கை கொண்டு ஏசலாடும் யானை.

யாளி மீது பாகன்.

பாகன் கையில் அங்குசம்.

அங்குசம் கண்டு மிரளும் யாழியின் கண்கள்

இவ்வளவும் தேவை ஒரு டியூப் லைட் மாட்ட

*********

ரின் -டைட் விளம்பர யுத்தம் காண சகிக்கவில்லை. இந்த FMCG நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கொடுக்கும் பில்ட் அப் இருக்கிறதே அடேயப்பா.

சர்வ சாதாரணமான சமாச்சாரங்களான சலவை சோப், பவுடர் இவர்கள் நொபல் விஞ்ஞானிகளை கொண்டு தயாரித்தது போன்ற பிம்பத்த நிறுவ முயன்றாலும் அது பல சமயங்களில் படுதோல்வியில் முடிகிறது.

குறிப்பாக பற்பசை மற்றும் டூத் பிரஷ் போன்றவைகளை என்னவோ ராக்கெட் தொழில் நுட்பம் கொண்டு தயாரித்தது போல் காண்பிப்பார்கள்.

*********

பண்டைய தத்துவங்களையும் நவீன சிந்தனைகளையும் கலந்து பேல்பூரியாகத்தரும் நியூ ஏஜ் சாமியார்களைக்கண்டால் எனக்கு அறவே ஆகாது. செஷனுக்கு இவ்வளவு என்று மீட்டர் போட்டு அமவுண்டு கறக்கும் யாரையும் தத்துவ ஞானியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பேர்பட்டவர்களின் பின்னால் சமூகத்தில் நல்ல ஸ்திதியில் உள்ள பலர் அணிவகுப்பது ஆச்சர்யம்.

இடது கன்னத்திற்கு ஒருவர், வலது கன்னத்திற்கு ஒருவர் என்று ஷேவிங் செய்வத்தில் கூட ஸ்பெஷலிஸ்டுகள் வந்துவிட்ட காலமிது. ஆனால் மேற்படி நியு ஏஜ் குருமார்கள் யோக கற்பிப்பது, பத்திரிக்கைக்கு பத்தி எழுதுவது, CEO க்களுக்கு அட்வைஸ் செய்வது , உலக அமைதியை ஏற்படுத்துவது , ஆஸ்பத்திரி நடத்துவது என்று சகலத்தையும் செய்கிறார்கள். பலர் சிலகாலம் ஆட்டத்தில் இருந்து கல்லா கட்டியவுடன் ஃபீல்ட் அவுட் ஆகிறார்கள். ஆட்டத்தில் தொடருபவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.